Thursday 29 November 2012

புராணங்களிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட திருஞான சம்பந்தர்

          பழைமைவாதிகளின் கடும் கண்டனத்தைச் சந்தித்த நாவல் சோலை சுந்தரபெருமாளின் 'தாண்டவபுரம்'.  திருஞானசம்பந்தரை நம்பமுடியாத புராணக் கதைகளிலிருந்து மீட்டு, அவர் காலத்திய சமூக, பொருளாதார, சமயப் பின்னணியில் சம்பந்தரின் பணியை உடன் மறையாக, பார்க்கும் நாவல் தாண்டவபுரம்.  திருஞானசம்பந்தர் முன்னெடுத்த சைவத்தை பிராமண மதத்தின் நகலாகப் பார்த்து, சமணம், பவுத்தம் ஆகியவை ஆரிய எதிர்ப்பு மதங்கள் என்று மதிப்பீடு செய்து, அதனால் நகல் சமயமான சைவத்தை நிராகரிக்கும் பகுத்தறிவு வாதபோக்கு ஆழமாக வேர்விட்டிருக்கும் சிந்தனை உலகில் சம்பந்தரின் சைவம் தமிழ் மரபு சார்ந்தது, தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஏற்றம் தருவது என்ற மறுபக்கத்தைச் சித்தரித்துக் காட்டுவது இந்த நாவல்.  சமண சமயம் மன்னர்களின் ஆதரவைப் பெற்றிருந்ததுபோல், சைவ சமயம் மன்னர்களின் ஆதரவைப் பெறாமல் இருந்த நிலையில் விவசாய சமூகத்தின் எழுச்சி ஒரு வரலாற்றுப் போக்காகும் என்பதையும்,  அதில் திருஞான சம்பந்தர் போன்ற சமயத் தலைவர்கள் தோன்றுவதும் இயல்பான போக்கேயாகும் என்பதையும் வரலாற்று நோக்கில் நாவலை வரைந்து காட்டுகிறார் ஆசிரியர்.  சம்பந்தர் சமணத்தை எதிர்கொண்ட விதம் நாவலில் பேசப்படுகிறது.

           
             பெரிய புராணத்திலிருந்து தாண்டவபுரம் வேறுபடுவது தான் நாவலுக்குக்கிளம்பியிருக்கும் எதிர்ப்பிற்கு ஒரு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.  ஆனால் அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது.  வடக்கிருந்து வந்த சமணத்தையும், பவுத்தத்தையும் தமிழ்நாட்டுச் சித்தாந்த சைவம் நிராகரித்தது போலவே, அங்கிருந்து வந்த வேதாந்த சைவத்தையும் அடிப்படையில் நிராகரித்தது.  இந்த அம்சத்தை ஆசிரியர் தெளிவாக நாவலில் கொண்டு வந்திருக்கிறார்.  வேற்றுமையில் ஒற்றுமை காணவிரும்பாத இந்துத்துவ சக்திகள் இந்த நாவலுக்கு கடும் எதிர்ப்பைக் காட்டுவதற்கு இதுவே அடிப்படைக் காரணம்.  இந்த முரண்பாட்டைப் புரிந்து கொள்ளாமல் ஆதீனங்கள் அமர்க்களம் செய்கின்றனர்.  தமிழ்ச் சைவத்தின் பலவீனமே தமிழ்நாட்டுஆதீனங்கள் தான்.


               இந்துத்துவ வாதிகள் மற்றும் அவர்களின் குணத்தைப் புரிந்து கொள்ளாத சைவர்கள் உணர்ச்சிவசப்பட்டு எதிர்ப்பைக் காட்டுவதற்கு திருஞானசம்பந்தர் மனோன்மணி என்ற கணிகையுடன் வாழ்ந்தார் என்ற நாவலின் சித்தரிப்பு ஒரு முக்கிய காரணம்.  இந்தச் சித்தரிப்பை அவர்கள் விரும்பாதிருக்கலாம்.  ஆனால் தமிழையும், சித்தாந்த சைவத்தையும் தூக்கிப் பிடிக்கும் நாவலை அவர்களால் எப்படி விரும்பாமல் இருக்க முடிகிறது?  மண் சார்ந்து மொழியும், சமயமும் வளர்வதை, அந்தப் போராட்டத்தைச், சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  திருஞான சம்பந்தரை மனோன்மணி என்ற கணிகையுடன் சம்பந்தப்படுத்துவது ஒரு மாபெரும் குற்றம் என்றால், அந்தக் குற்றத்தைச் செய்த சுந்தரரை என்ன செய்வது?  சேக்கிழர் மீது அவதூறு வழக்கு போட முடியுமா?  சுத்நதரருக்கு ஏற்பட்ட அனுபவத்தை சம்பந்தருக்கும் விரிவாக்கிவிட்டார் சோலை சுந்தர பெருமாள்.

                 இதற்குத் தானா இவ்வளவு கூச்சல்?

                  சேக்கிழாருக்கு பெரிய புராணம் எழுத உரிமை இருந்தால், சோலை சுந்தர பெருமாளுக்கும் தாண்டவபுரம் எழுத உரிமை உண்டு. சின்ன புராணத்தை, தன் காலத்தின் சமூகத் தேவை கருதி சேக்கிழார் பெரிய புராணமாக்கினார்.   சம்பந்தர் காலத்தை சமூக வரலாற்றுப் போக்கின் பின்னணியில் சோலை சுந்தர பெருமாள் நாவலாக்கிவிட்டார்.  புராணம் அக்கால வடிவம், நாவல் இக்கால வடிவம்.


                    திருஞான சம்பந்தர் காலத்திற்கும் சேக்கிழார் காலத்திற்கும் இடையில் கிட்டதட்ட 500 ஆண்டுகள் ஓடியிருக்கின்றன.  சேக்கிழார் காலத்திற்கும் சோலை சுந்தரபெருமாள் காலத்திற்கும் இடையில் கிட்டதட்ட 700 அல்லது 800 ஆண்டுகள் ஓடியிருக்கின்றன.  சமூக அறிவியல் பார்வை கொள்ள சேக்கிழாருக்கு வாய்ப்பில்லை.  சோலை சுந்தர பெருமாளுக்கு அந்த வாய்ப்பு உண்டு.  அதை அவர் பயன்படுத்திக் கொண்டார்.


                     ஒரு படைப்பைப் பற்றிப் பேசும்போது படைப்பாளியின் நோக்கம் என்ன என்பதைப் பார்க்க வேண்டும்.  அது விமர்சன தர்மம்.  சரியான அணுகுமுறை.   தன்னுடைய நோக்கத்தை இன்னொருவர் படைப்பில் தேடலாகாது.  சோலை சுந்தர பெருமாள் ஒரு நீண்ட முன்னுரை எழுதியிருக்கிறார்.  அது அவருடைய சமூக வரலாற்றுப் புரிதலையும், படைப்பின் நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.  நிலவுடைமைச் சமுதாயத்தின் வளர்ச்சி வரலாற்றில் தவிர்க்க முடியாதது.  தமிழ் மண்ணில் நிலவுடைமைச் சமூகம் வளரும்போது, மண்ணின் மொழியையும் மண்ணுக்குரிய சமயத்தையும் காக்கவும், வளர்க்கவும் வேண்டியிருக்கிறது.  அதேசமயம் வடக்கிருந்து வந்த பவுத்த, சமண, வேதாந்த சமயங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.  இந்தக் காலகட்டத்தை,  அது பேசும் உண்மைகளை ஏன் மறுதலிக்க வேண்டும்?  தாண்டவபுரத்தை சமுதாய வரலாற்றுப் பார்வையில் மதிப்பிடாமல், வேறு பார்வையில் பார்ப்பது சரியாகாது.  வடையை எண்ணச் சொன்னால், வடையின் ஓட்டைகளை எண்ணக்கூடாது.  எண்ணினால் கணக்கு தவறாக வரும்.


                      சைவ எழுச்சியை சோலை சுந்தரபெருமாள் ஒரு பக்தனாக நாவலில் முன்வைக்கவில்லை என்பதைப் புதுமைவாதிகளும் புரிந்து கொள்ளவேண்டும்.  பெரிய புராணம் காட்டுகிற திருஞான சம்பந்தரின் வாழ்க்கையை நாவலாக்கவில்லை ஆசிரியர்.  அதற்கு மெருகூட்ட அவர் முயலவில்லை.  சம்பந்தர் பற்றிய நம்ப முடியாக நிகழ்வுகளையும், சித்தரிப்புகளையும் ‘தாண்டவபுரம்’  நிராகரித்துவிட்டது.

                       நிலவுடைமைச் சமுதாயம் தன்னைக் கட்டமைத்துக் கொள்வது என்பது வரலாற்றின் தவிர்க்க முடியாத போக்காகும்.  தமிழ்நாட்டில் அந்தப் போக்கு தமிழ் மொழியையும், தமிழர் சமய மரபையும் உயர்த்திப் பிடித்தது.  சமயத்தை வாழ்க்கையோடு பிணைத்தது.  சமண, பவுத்த, வேதாந்த சமய மரபுகள் தமிழ் மண்ணில் கால் ஊன்றி வளரத் தொடங்கியபோது, சொந்த மண்ணின் மொழியும், சமயமும் அவற்றின் சவாலை ஏற்றன.  அந்தச் சவாலைச் சொல்வது தான் தாண்டவபுரம்.


                                                                                                                                 நன்றி
                                                                                                                  புதிய புத்தகம் பேசுது                      

2 comments:

  1. this is one of the balanced reviews i have come across about this book-rajasekaran

    ReplyDelete
  2. this is one of the balanced reviews i have come across about this book-rajasekaran

    ReplyDelete