Saturday 22 December 2012





            மறுவாசிப்பை முன்மொழியும் நூல்
                        
                                                   …ஜனநேசன்…

    படைப்பாளி படைப்பை முன்வைப்பான், திறனாய்வாளன் படைப்பின் உள்ளடக்கம், அதன் நோக்கம், படைப்பு சமூகத்தில் உருவாக்கும் தாக்கம் போன்றவற்றை எடுத்துரைப்பவன்.  அவனது எடுத்துரைப்பு பல நல்ல படைப்புகளை அடையாளம் காட்டும்.  ஆக சமைப்பவனைப்போல் சுவைப்பவனும், கலைஞனைப் போலவே சுவைஞனும் முக்கியமானவர்கள், தவிர்க்க முடியாதவர்கள், படைப்பு முயற்சி முடிந்த பின்னும், சமூகச் செலவாணிக்கு திறனாய்வாளனின் பங்கு முக்கியமானது, அவசியமானதும் கூட.
     இந்தப் புரிதலில்தான் ’சிகரம்’ செந்தில்நாதனின் திறனாய்வுகள் என்னும் நூலினை எதிர்கொள்கிறோம்.  இந்நூலில் 5 திறனாய்வுக் கட்டுரைகளும், 26 மதிப்புரைகள், அணிந்துரைகளும் என இருபகுதியாக கட்டுரைகள் இடம் பெற்று உள்ளன.
      முதல் பகுதியில் முதல் கட்டுரை ’விந்தன் நாவல்கள் எனும் கட்டுரை’ விந்தன் எழுதிய நாவல்கள் குறித்து ஒரு மறுவாசிப்பை முன்மொழிகிறது.  இக்கட்டுரையில் சிகரம் செந்தில்நாதன் ஒரு முக்கியமான கேள்வியை முன் வைக்கிறார் – ‘அமைப்பு சாராத படைப்பாளியாக இருப்பது பலமா? பலவீனமா?’   அமைப்பு சாராத படைப்பாளி ஒரு சமூகப் பிரச்சனைக்காக தீர்வை எப்படி யதார்த்தமாக முன் வைக்கிறார் என்பதனை விந்தன் எழுதிய ‘பாலும் பாவையும்’ என்ற நாவலை முன் வைத்து விளக்குகிறார்.  விந்தன், புதுமைப்பித்தன் முதலான அமைப்பு சாரா படைப்பாளிகளின் படைப்புகளில் காணப்படும் முற்போக்குத் தன்மையைவிட நம்பிக்கை வறட்சியும் இருண்மை நோக்கும் (PESSIMISM) தூக்கலாக பதிந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.  இந்தக் கட்டுரையை சுத்தம் சுயபிரகாரம் இலக்கியவாதிகள் வாசிக்க வேண்டும்.
     இரண்டாவது கட்டுரையில் கல்கியின் இரு நாவல்களான
’சிவகாமியின் சபதத்தையும், அலைஓசையையும் மறுவாசிப்புக்கு உட்படுத்துகிறார்’. 
     மகேந்திர பல்லவன் மாறுவேடத்தில் நிகழ்த்தும் பல ஜாலங்கள் அன்று திகைக்க வைத்தன.  மறுவாசிப்பில் இன்று அப்படி இல்லை.  மகேந்திரவர்மனின் பல அதிரடிகளும் ஓரிரு வேலையும் மாறுவேடங்களும் இன்று நம்பும்படியாக இல்லை.  ஒரு சினிமாத்தனம் சிறகடிக்கிறது.  பல்லவ நாட்டுச் சக்கரவர்த்தி வாதாபி புலிகேசியின் நம்பிக்கைக்குரிய ஒற்றுப்போல் சித்தரிக்கப்படுவதும், அவர் திடீர் திடீர் என்று எல்லா இடங்களில் தோன்றுவதும் ஜீரணிக்கமுடியாதவை.  நாகநந்தியின் மாறுவேடமும் அப்படித்தான்.  நாகநந்தி புலிகேசியாய் உருவெடுப்பதும் அந்தக்காலத்தில் சுரங்கப்பாதைகள் இருந்தன என்பதற்காக அதீத கற்பனையில் வாசகனைத் தள்ளுவது என்பதெல்லாம் ஒரு நல்ல இலக்கியப் படைப்பிற்கு உள்ளே வரவேண்டிய அம்சமல்ல.  ’நாவலின் முடிவிலே சிவகாமி கோயிலிலே தாலி கட்டிக் கொள்கிறாள்.  பிற்காலச் சோழர் காலத்தில் வரப்போகும் தேவதாசி முறைக்கு, பொட்டுக்கட்டும் முறைக்கு, இது முன்னோட்டமா?  கல்கி அறிந்தோ அறியாமலோ நாட்டியக்காரிகளின் சமூக நிலையைக் கண்முன் நிறுத்துகிறார்’.
     நாவலுக்கு ஒரு வரலாற்றுத் தோற்றத்தை தருவதற்கு சிறுத்தொண்டர், திருநாவுக்கரசர், குலச்சிறையார், மங்கயர்க்கரசி, பாண்டியன், சோழன், பல்லவர்கள் போன்ற உண்மை மாந்தர்களை இணைத்துள்ள கல்கி, சைவ, சமண, புத்த சமயப் போராட்டங்களையும் பின்களமாக அமைக்கிறார்.  ஆனால் சமயப் போராட்டங்களைச் சித்தரிப்பதில் சார்புநிலை தெரிகிறது.
      இதே போல் ’அலை ஓசை’ நாவல் சுதந்திரப்போராட்ட நாவல் என்று சொல்லப்பட்டாலும், இந்நாவலுக்கு சுதந்திரப்போராட்டம் பின்னணிதானே தவிர சுதந்திரப்போராட்ட நாவலல்ல.  காரணம், சுதந்திரப்போராட்டமும் சம்பவங்களின் எதார்த்தமும் அழுத்தமாகப் பதியாமல் இருக்கிறது.  கதையின் பெரும்பகுதி வடநாட்டில் நடக்கிறது.  அவர்கள் வடநாட்டு வாழ்க்கையோடு ஒன்றவில்லை.  வாசகன் மனத்தில் வடநாட்டு வாழ்க்கை பதியவில்லை.  இப்படி ஒன்றுமே இல்லாமல் ஆயிரம் பக்கம் நாவல் வந்திருக்கிறது.  கல்கி ஒரு நல்ல கதை சொல்லி என்பதைக் காட்டுகிறது. 
     நாவலின் முக்கிய பாத்திரம் சூரியா மகாகவி பாரதி பற்றி ”பாரதியார் என்ன சொல்லி இருந்தால் இப்போது என்ன?  (காதல் பற்றிதான்) …………………………………………………..   அவர் சொன்னதெல்லாம் சரி என்று நான் ஒப்புக்கொள்ளவில்லை.  பாரதியாருக்கு அறிவு தெளிந்திருந்தபோது தேசத்தின் சுதந்திரத்தைப் பற்றி பாடினார்.  கொஞ்சம் மயக்கமாய் இருந்தபோது காதலைப்பற்றிப் பாடினார்” என்று சொல்லுவதில் கல்கியின் நோக்கம் என்ன என்பதை கல்கியின் வரலாற்றை யோசித்து பார்த்தால் நமக்கு பல விக்ஷயங்கள் புரியும்.   இப்படி எத்தனையோ கல்கியின் பார்வைகளை மறுவாசிப்பின் மூலம் புரிந்து கொள்ள முடியும் என்று சிகரம் செந்தில்நாதன் எடுத்துரைக்கிறார்.
     தொ.மு.சி. ரகுநாதனின் பஞ்சும் பசியும் நாவல் குறித்தும், திரு.வி.க. எழுதிய பெண்ணின் பெருமை நூல் குறித்தும் மறுவாசிப்பு செய்து இவ்விரு நூல்களின் சிறப்பையும், நிறை குறைகளையும் நயமாகச் சுட்டிக் காட்டியுள்ளார் செந்தில்நாதன்.
     மேற்குறித்த கட்டுரைகள் தவிர 26 கட்டுரைகளில் மதிப்புரையும், அணிந்துரையும் கலந்து கோர்த்துள்ளார்.  ஒவ்வொரு கட்டுரையும் சமூக நோக்கில் விரிந்த ஆழ்ந்த பார்வையில் சுருக்கமாகவும், சுவையாகவும் குறை நிறைகளை நயம்பட உரைப்பதாகவும் உள்ளன.
                                   …நன்றி…
                             புதிய புத்தகம் பேசுது

Friday 7 December 2012

இனியனின் ‘ சமயங்களின் பின்புலத்தில் தமிழக வரலாறு ’

                      நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தமிழகத்தின் வரலாறு, சமய வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தே கிடக்கிறது.  சங்க காலத்திலேயே சமயக் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளன எனினும், சங்கம் மருவிய காலத்திற்குப் பிறகு, அவை விரைந்து தலைதூக்குகின்றன.  பல்லவர் காலம்,பிற்காலச் சோழ, பாண்டியர் காலம், நாயக்கர் காலம் என்பனவெல்லாம் சமயங்களின் ஆட்சி நடந்த காலம் என்றே கூற வேண்டும்.  அதனால்தான் இடதுசாரியரான வழக்குரைஞர் ச.செந்தில்நாதன், அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை என்னும் நூலில், தமிழக வரலாற்றைச் சமயப் பின்புலத்தில் ஆய்வு செய்கின்றார்.

                       மூவேந்தர் ஆட்சிக் காலம் முடிந்து, ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலம் தொடங்கிய காலம் வரையிலான இடைக்கட்டம் பல்வேறு மரபுகளைச் சார்ந்த மன்னர்களால் ஆளப்பட்டது.  அக்காலகட்டத்தையே தன் ஆய்வுப் பொருளாக நூலாசிரியர் அமைத்துக் கொண்டுள்ளார்.  இசுலாமியர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் எனப் பலரும் தமிழகத்தை ஆண்ட காலம் அது.  தமிழ்மொழி தன் செல்வாக்கு இழந்து, பிற மொழிகள் கோலோச்சிய காலம் என்றும் அதனைக் கூறலாம்.  அந்நிலையில் தமிழைத் தாங்கிப் பிடித்தவர்கள், சமயங்களின் மீது நம்பிக்கை கொண்ட புலவர்கள் சிலரே என்பதை இந்நூல் நமக்குக் காட்டுகின்றது.

                         அருணகிரிநாதர் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.  கி.பி.1424 முதல் 1447 வரை ஆட்சி நடத்திய விஜயநகர மன்னன் இரண்டாம் தேவராயனின் காலத்தில் அவர் வாழ்ந்திருக்கக் கூடும் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிக்கின்றனர்.  எனினும் அருணகிரிநாதரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் குறைவாகவும், கற்பனைக் கதைகளே கூடுதலாகவும் நமக்குக் கிடைக்கின்றன.  அவருடைய பாடல்களைக் கொண்டே நாம் சில ஆய்வுகளை நிகழ்த்த வேண்டியுள்ளது.

                            அருணகிரிநாதரின் முருக வணக்கப் பாடல்கள் வெறும் ஆன்மீகம் என்று நாம் ஒதுங்கி விட முடியாது.  அங்கொன்றும் இங்கொன்றும்க சங்க இலக்கியங்களில் முருகன் பற்றிய செய்திகள் காணப்பட்டாலும், பிறகு முருக வழிபாடு அருகிலேயே காணப்பட்டது.  சமண பவுத்த காலங்களும், சைவ வைணவக் காலங்களுமாய்த் தமிழக வரலாறு நடை போட்டது.  முருகன் சைவ மரபைச் சார்ந்து வழிபடப்பட்டாலும், அங்கு சிவனுக்கே முற்றும் முதலான முதல் இடம் வழங்கப்பட்டது.  கச்சியப்ப முனிவர் படைத்தளித்த, கந்த புராணம் கூட, பார்ப்பன மயமாக்கப்பட்ட கந்தனையும், கார்த்திகேயனையுமே நமக்குக் காட்டுகின்றது.  முருகன் அங்கே தென்படவில்லை.


                              தமிழ்க் கடவுள் என்று நமப்ப்பட்ட முருகனை அருணகிரிநாதரே மீண்டும் அரங்கிற்கு அழைத்து வருகிறார்.  பல்வேறு புதிய புதிய சந்தங்களில் அவர் படைத்த பாடல்கள் முருக வழிபாட்டை மட்டும் மேம்படுத்தவில்லை, தமிழ் உணர்வையும் சேர்த்தே மேம்படுத்தியது என்பது செந்தில்நாதன் முன்வைக்கும் வாதம்.  அருணகிரிநாதரின் குரல் தமிழ்க் குரல் என்கிறார் அவர்.

                              சைவ ஆதீனங்கள் என்று கூறப்படும் சைவ மடங்கள் குறித்துப் பல அரிய தகவல்களை இந்நூல் தருகின்றது.  பிற்காலச் சோழர்கள் சைவ மதத்தை உயர்த்திப் பிடித்தார்கள் என்று நாம் படிக்கிறோம்.  ஆனால் அவர்கள் உயர்த்திப் பிடித்தது சித்தாந்த சைவமன்று, வைதீகச் சைவமே என்பதைச் சான்றுகளுடன் இந்நூல் நிறுவுகிறது.  அதனால்தான் சைவ மதங்கள் எவையும் சோழர் காலத்தில் கட்டப்படவில்லை.  வைணவ சமயத்தைச் சார்ந்து நின்ற நாயக்க மன்னர்களின் காலத்திலேதான் அம்மடங்கள் உருவாகியுள்ளன.  இது ஒரு பெரிய வரலாற்று முரணாகும்.  பார்ப்பனர்களால் வழிநடத்தப்பட்ட சோழ மன்னர்கள், பார்ப்பனர்கள் மட்டுமே மடங்களை நடத்த வேண்டும் என்னும் போலிக்கோட்பாட்டுக்கு உடன்பட்டனர்.  பார்ப்பனர் அல்லாதார் கட்டிய சில மடங்களை இடித்தும் இருக்கிறார்கள்.  இதனையே வரலாற்று ஆசிரியர்கள் குகையிடிக் கலகம் என்று அழைக்கின்றனர்.

                               தமிழ்நாட்டில் 18 சைவ மடங்கள் இருந்தன என்று குறிப்புகள் உள்ளன.  எனினும் இன்றைக்கு ஏழு மடங்கள் மட்டுமே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.  இராமேசுவர ஆதீனம், சிவப்பிரகாச ஆதீனம் போன்றவை இன்று முற்றிலுமாய் அழிந்து விட்டன.  வேறு சில மடங்கள் பெயரளவில்தான் இருக்கின்றன.

                               தாயுமானவர், குமரகுருபரர், சிவப்பிரகாசர், அண்ணாமலை ரெட்டியார் ஆகியோரைப் பற்றியும் பல குறிப்புகள் நூலுள் இடம் பெற்றுள்ளன.  இறுதி இயல் வள்ளலாரைப் பற்றி விரிவாகவும், நிறைவாகவும் பேசுகின்றது.  சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய இராமலிங்க அடிகளாரே,  இன்றைய தமிழ்த் தேசியக் கோட்பாட்டின் வேராக விளங்குகின்றார் என்பதும் இந்நூலில் காணப்படும் செய்தி.


         -சிகரம்.ச.செந்தில்நாதன் எழுதிய‘அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை’ என்னும் நூல்  பற்றி இனியன்.


                                                                                                                    நன்றி,

                                                                                                        கருஞ்சட்டைத்தமிழர்

Monday 3 December 2012

பாலாவின் "பரதேசி"யில் காப்புரிமை மீறலா?

          பாலாவின் இயக்கத்தில் "பரதேசி" மிக விரைவில் தெருவுக்கு வரப் போகிறதாம்.  விளம்பரங்கள் பலமாக இருக்கின்றன.  மூலக்கதை பற்றி மட்டும் யாரும் மூச்சு விடுவதில்லை.  பத்திரிகைச் செய்திகளிலிருந்தும் படம் பற்றிய சில பேட்டிகளிலிருந்தும், பரதேசியின் கதை தேயிலைத் தோட்டம் பற்றியது என்பது தெரிய வருகிறது.  இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் தேயிலைத் தோட்டங்களில் வாழ்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கையைப் படம் பேசுகிறதாம்.  அடிமைகளாக நடத்தப்பட்ட அவர்கள் அனுபவித்த கொடுமைகள் சித்தரிக்கப்படுகிறதாம்.  ஆக, அது தேயிலைத் தோட்ட அசல் வாழ்க்கையைப் பற்றி சுமார் முப்பத்திஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நாவலாசிரியர் டி.செல்வராஜ் எழுதிய "தேனீர்" நாவலின் தழுவல் தான் ‘பரதேசி’ என்ற கருத்து இப்போது பரவலாகப் பேசப்படுகிறது.  நாவலாசிரியர் செல்வராஜீம் இன்னும் தகவல் அறிந்த பலரும் கொதித்துப்போய் இருக்கிறார்கள்.  தன் படைப்பின் காப்புரிமை அப்பட்டமாக மீறப்பட்டிருக்கிறது என்று நாவலாசிரியர் கூறுகிறார்.  காப்புரிமை மீறப்பட்டிருக்கிறது என்பது உறுதியானால் சட்ட பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கவும் அவர் தயாராகிறார்.