Friday 16 November 2012

ஒரு சொல்


                         மங்களம் நாவலை வெளியிட்டிருப்பது சந்தியா பதிப்பகம்.  நான் சென்ற ஆண்டு எழுதிய ஒரு நூல் " முருகன் வணக்கத்தின் மறுபக்கம்".  அந்த நூல் பற்றி ஒரு குறிப்பு.
                                       

                                         
                           நாட்டின் மக்கள் இரண்டு வகையில் ஆளப்படுகிறார்கள்.  நாட்டின் நாடாளுமன்றம் மாநிலங்களின் சட்டமன்றம் ஆகியவை இயற்றும் சட்டங்கள், நிர்வாகம் செய்யும் அதிகாரவர்க்கம், சட்டத்தை அமல்படுத்தவும், சட்ட மீறலைத் தடுக்கவும் வல்ல நீதிமன்றம் இவைகளின் மூலம் அரசியல் ரீதியாக மக்கள் ஒரு வகையில் ஆளப்படுகிறார்கள்.  அரசு இயந்திரங்களால் மக்கள் ஆளப்படுவது புறச்சக்திகளின் ஆளுகையாகும்.  மக்கள் இன்னொரு வகையிலும் ஆளப்படுகிறார்கள்.  அதாவது மக்கள் சமூகத்தால் (Civil Society) ஆளப்படுகிறார்கள்.  வேறு சொற்களில் சொன்னால் அகச் சக்திகளால் ஆளப்படுகிறார்கள்.  அகச் சக்திகள் மக்களின் நம்பிக்கைகள்.  அவைகள் ஒன்றல்ல, இரண்டல்ல பல.  கடவுள் பக்தி, நாள் பார்த்தல், நட்சத்திரம் பார்த்தல், ராகுகாலம், எமகண்டம், அக்ஷ்டமி, நவமி, தெய்வக்குற்றம், வேண்டுதல், பரிகாரம், சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்கங்கள், வழக்கங்கள், சகுனம், சோதிடம், ஜாதகம், ராசிப்பலன் - இப்படி எண்ணற்ற நம்பிக்கைகள் மக்களுக்கு.  இந்த நம்பிக்கைகளால் அவர்கள் ஆளப்படுகிறார்கள்.  இந்த நம்பிக்கைகளின் வேர்கள் சமயத்திடம் இருக்கிறது. சமயம் இறைவனைச் சார்ந்து இருக்கிறது.  புறச்சக்திகளின் ஆணையை மீறத் தயாராக இருக்கும் மக்கள்கூட அகச்சக்திகளின் ஆணையை மீறத்தயாராக இல்லை.


                         மேலே பார்த்தவைதான் இன்றைய சமூகத்தின் எதார்த்தம்.  இந்தச்சூழ்நிலையில் சமூக மாற்றத்திற்கான எந்த இயக்கமும் சமயத்தின் செல்வாக்கைப் புறம்தள்ள முடியாது.  வெறும் முரட்டுத்தனமான தாக்குதல்களால் மக்களை மாற்றிவிட முடியாது.  மக்கள் மத்தியில் சிந்தனை மாற்றம் ஏற்பட வேண்டும்.  சித்தாந்த விவாதமும், போராட்டமும் நடத்தப்பட வேண்டும்.  மக்களைச் சிந்திக்க வைப்பதன் மூலம், சில தெளிவுகளை ஏற்படுத்த முடியும்.


                           புராணக் கதைகளுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும் ஆட்பட்ட மக்களை, சமயநிலைப்பாட்டை சமூக வரலாற்று பொருளாதார அறிவியல் பின்னணியில் புரிந்து கொள்வதற்கு நாம் உதவவேண்டும்.  சமயச் சக்திகளுக்குள்ளும் மோதல்கள், முரண்பாடுகள் உண்டு.  மூடப் பழக்க வழக்கங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் எதிரான கலகக்குரல் சமய உலகிலும் உண்டு.  சமய உலகில் தோன்றிய பல ஞானிகள் சடங்குகளை எல்லாம் நிராகரித்திருக்கிறார்கள்.  சீர்திருத்தம் பேசியிருக்கிறார்கள்.  வடலூர் சக்தியஞான சபைக்கும் காஞ்சி மடத்திற்கும் வேறுபாடு இல்லையா?

                             இந்த வேறுபாட்டை மேலோட்டமாகப் பார்க்காமல், இவற்றின் வேர்களை மக்களுக்குக் காட்டவேண்டும்.  இந்த முயற்சி சிந்ததனை வளர்ச்சிக்கு உதவும், சித்தாந்த போராட்டத்திற்கு உதவும்.  மறு சிந்தனை, மறுவாசிப்பு, மறுபக்கம் மக்களுக்குப் பழக்கமாக வேண்டும்.  அவை எல்லாம் இருக்கின்றன என்பது தெரியப்படுத்தப்பட வேண்டும்.  மறுசிந்தனையும், மறுவாசிப்பும் மறுபக்கமும் மக்களிடம் ஏற்படும்போது, அவர்கள் மாற்றத்தை நோக்கி நகர்வார்கள்.  பக்திமான்களிலும் பாரதி, விவேகானந்தர், வள்ளலார் போன்ற நெறியினர் உண்டு.  அவர்கள் எண்ணிக்கை அதிகமாக வேண்டும்.  அதற்கு ஒரு தத்துவ விவாதமும்,கருத்துப் பறிமாற்றமும் தேவை.  அதற்கு நான் எழுதிய முருகன் வணக்கத்தின் மறுபக்கம் உதவும்.


                                தமிழில் அர்ச்சனை, சாதிபாகுபாடு இன்றி அனைத்துமாந்தரும் அர்ச்சகராதல் போன்ற கோரிக்கைகளை கொள்கை அளவில் ஏற்கும் பலர் அதை நடைமுறைப்படுத்திக் கொள்ள தயங்குகிறார்கள்.  அந்தத் தயக்கம் உடைபட வேண்டும்.  அந்தத் தயக்கத்தை உடைக்க பக்தர்கள் மத்யிலேயே பலர் இருக்கிறார்கள்.  அவர்களை உற்சாகப்படுத்துவதும், உறுதுணையாக இருப்பதும், தார்மீகக் கரம் நீட்டுவதும் காலம் இடும் கட்டளையாகும்.  அந்தக் கட்டளையின் திசைவழிச் செல்ல இந்த நூல் உதவும்.

                                   திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக் கழகத்தின் முன்னாள் நூலகர் திரு.ஆறுமுகம் இந்நூல் எழுத பயன்பட்ட பல நூல்களையும் தகவல்களையும் திரட்டிக் கொடுத்தார்.  அவர் என் நன்றிக்கு உரியவர்.  என்னுடைய பல நூல்களைத் தொடர்ந்து வெளியிடும் சந்தியா பதிப்பகத்திற்கும், பதிப்பகம் சார்ந்த அன்பர்களுக்கும் என்றும் உண்டு என் நன்றி.

                       

1 comment:

  1. அகச்சக்திகளின் ஆணைகளுக்குக் கட்டுப்பட மறுப்பதே மெய்யான புரட்சி. அந்தப் புரட்சியை நடத்திடத் தூண்டும் புற முயற்சிகளில் இந்தப் புத்தகமும் ஒரு முன்னணி இடம் பெறும்.

    சமய உலகிற்குள்ளேயே கலகக்குரல் எழுப்பி வந்திருபபோரின் சரியான, இறை நம்பிக்கை த்விர்த்த, நியதிகள் விலக்கிய பரிணாம வளர்ச்சிதான் நாம் என்ற தெளிவு இன்றைய முற்போக்காளர்களுக்கு ஏற்பட வேண்டும்.

    ReplyDelete