Sunday 25 November 2012

படிக்க வேண்டிய ஒரு புத்தகம்

                                 

            அனைவரும் படிக்க வேண்டிய, குறிப்பாக இடதுசாரிகள் படிக்க வேண்டிய ஒரு முக்கிய நூல் அண்மையில் வெளிவந்துள்ளது.  அந்த நூல்ஆங்கில நூல்.  'Socialism is the future" என்று சோஷலிசத்திற்கே எதிர்காலம் என்று அடித்துச் சொல்லும் நூல்.  டாக்டர்.ரெக்ஸ் சற்குணம் எழுதியிருக்கிறார்.

                                         எதிர்காலம் சோஷலிசத்திற்கே என்று நாம் சொல்லவேண்டுமானால், நமக்கு சோஷலிசம் பல நாடுகளில் வளர்ந்த வரலாறு, வீழ்ந்த வரலாறு, இன்று இருக்கும் சோஷலிச நாடுகளின் நிலைமை முதலியன நமக்கு தெரியவேண்டும் அல்லவா?  அந்த வரலாறுகள் எல்லாம் இந்த நூலில் அடங்கியிருக்கின்றன.  இந்த வரலாறுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டால்தான் எதிர்காலம் சோஷலிசத்திற்கே என்று மார்த்தட்டி உரத்த குரலில் பேசமுடியும்.  அதற்குத் துணை புரியும் நூல் இது.  அந்த வகையில் இது ஒரு சிறிய கலைக் களஞ்சியம்.  சீனாவின் இன்றைய நிலையை கடுமையாக விமர்சித்திருக்கிறார் ரெக்ஸ்.சற்குணம்.  அவர் எழுதுகிறார்,

                                  "Mao had wanted to create a new man - Communist man : But today Socialist China has created only a capitalist man"

                                   இப்படி சொல்லும் ஆசிரியர் மாவோவின் மீதும் தன் விமர்சனப் பார்வையை செலுத்தத் தவறவில்லை.  மாவோவின் கலாச்சாரப் புரட்சி கட்டுப்பாட்டை இழந்ததன் விளைவுகளைச் சுட்டுக்காட்டுகிறார்.

                               " Let a hundred flowers bloom, a hundred schools of thought contend"

                                  என்று சொன்ன மாவோவை, லெனினை எந்த உயர்ந்த பீடத்தில் வைத்துப் பார்க்கிறாரோ அப்படியே மாவோவையும் வைத்துப் பார்க்கிறார்.

                                    மனித குல வரலாற்றில் மனிதனே மனிதனைச் சுரண்டும், சுரண்டல் சமுதாயததிற்கு முற்றுப் புள்ளி வைத்த சோவியத் யூனியனின் எழுச்சி பற்றியும், பின்னர் அதன் வீழ்ச்சி பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார் ஆசிரியர்.  ஸ்டாலினின் சொல்லும் செயலும் மாறுபட்டதன் விளைவு, பொது வுடைமைக் கட்சியின் மேன்மை என்ற கோட்பாடு, மற்ற நிர்வாகம், நீதித்துறை முதலியனவற்றைப் பின்னுக்குத் தள்ள, மக்கள் என்ற பெயரில் சர்வாதிகாரம் நிலை கொண்டதையும், பின்னர் அதுவே சோவியத்தின் வீழ்ச்சிக்கு வழி வகுத்ததையும் சுட்டிக் காட்டுகிறார்.

                                      லத்தீன் அமெரிக்க சோஷலிச நாடுகள் உட்பட பல்வேறு சோஷலிச நாடுகள் பற்றியும் ஆசிரியர் எழுதியுள்ளார்.  அந்த நாடுகளையும் விமர்சனத்தோடுதான் பார்த்திருக்கிறார்.  இந்தியா பற்றியும் தனியாக ஒரு அத்தியாயம் இருக்கிறது.  அதில் விமர்சனம் மென்னையாக இருக்கும்.

                                         உலக சோஷலிச நாடுகள் பற்றி எல்லாம் எழுதிய டாக்டர்.ரெக்ஸ்.சற்குணம்  எதிர்காலம் சோஷலிசத்திற்கே என்று வாய்ச்சொல் வீரராகச் சொல்லவில்லை.  அது எப்படி சாத்தியம் என்பதையும் சொல்கிறார்.

                                           புரட்சிகரமான கட்சி இல்லாமல் புரட்சி இல்லை.  புரட்சி இல்லாமல் சோஷலிச சமுதாய அமைப்பு இல்லை.  எனவே புரட்சிகரமான கட்சி வேண்டியிருக்கிறது.  புரட்சிகரமான கட்சி சாதிக்க வேண்டுமானால் அதற்கு மத்தியத்துவம் (Centralism) இருக்க வேண்டும்.  அது ஜனநாயக மத்தியத்துவமாக (Democratic Centralism) இருக்க வேண்டும்.  இதைத்தான் லெனின் சொன்னார்,ரோசலுக் சம்பர்க் விளக்கம் தந்தார்.  கிராம்சி வழிசாட்டினார்.  இவர்கள் காட்டிய வழியைப் புரிந்து கொண்டு பயணம் மேற்கொண்டால், சோஷலிசம் வெறும் கனவான இருக்காது, எட்டாக் கனியாக இருக்காது, தொடுவானமாக இருக்காது.  மாறாக கனவு மெய்ப்படும்.  இதுதான் இந்த நூலின் செய்தி ;-
                                    " Hence it could be definitely affirmed that for a left party striving for socialism, Leninist's Democratic Centralism within the scope of Rosa Luxemburg's definition on Absolute Freedom and Gramsci's guidelines, is absolutely essential"

இந்த நூலின் விலை ரூ.200/-  பக்கம் 184.  கிடைக்கும் இடம்:  ரோசா வெளியீட்டாளர்கள், எண் 2, இரண்டாவது பிரதான சாலை, கஸ்தூரி பாய் நகர், அடையார், சென்னை - 600 020.









1 comment: