Tuesday 19 March 2013

திருஅருட்பாவும் வள்ளலார் மறைவும்


          திருஅருட்பாவும் வள்ளலார் மறைவும்                                                       
                                          சிகரம்.ச.செந்தில்நாதன்

     தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பைச் செய்து வரலாற்றில் போற்றிப் பேசப்படும் பலபேர், அவர்கள் வாழ்ந்த காலத்தில் எத்தகைய செல்வாக்குடன் மக்கள் மத்தியில் திகழ்ந்தார்கள் என்று அறிந்து கொள்ள வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் கணிசமான அளவு இல்லை.  கிடைப்பதெல்லாம் புராணங்களும், புனைக்கதைகளும் தான்.  வான் புகழ் வள்ளுவன், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகள், கட்டுத்தறியும் கவிபாடும் வீட்டிற்கு உரிய கம்பன் முதலியவர்கள் எல்லாம் மக்கள் மத்தியில் எந்த அளவுக்குத் தாங்கள் வாழ்ந்த காலத்தில் செல்வாக்கோடு இருந்தார்கள் என்பதற்கு எந்தத் தகவலும் இல்லை.  வரலாற்றின் பக்கங்களைப் புரட்டும் போது, வாழ்ந்த காலத்தில் மக்கள் மத்தியில் செல்வாக்கோடு இருந்தவர்களாகக் கண்ணில்படுபவர்கள் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தான்.  சுந்தரர், மாணிக்கவாசகர் செல்வாக்கு கூட சம்பந்தர், அப்பர் செல்வாக்குக் இணையானதாகக் கொள்ள முடியாது.  ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அருணகிரிநாதர் தான் வாழ்ந்த காலத்தில் மக்கள் மத்தியில் மிருந்த செல்வாக்குடன் இருந்தவர்.  அவருக்கு அடுத்தபடி வள்ளலார் வருகிறார்.  மடாதிபதிகள் மத்தியில் ஆதரவு இல்லாவிட்டாலும், மக்கள் மத்தியில் இருந்த ஆதரவு வள்ளலாருக்கு உதவி இருக்கிறதா என்றால், உதவி இருக்கிறது.  அதுபோலவே வள்ளலாரின் திரு அருட்பா கற்றவர் நெஞ்சில் நீங்கா இடத்தைப் பிடித்தது.  அது வள்ளலார் மறைந்த போது பெரிதும் உதவி இருக்கிறது.

     வள்ளலாரின் மறைவை மரணம் என்று பக்தர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.  அவர் ஜோதியில் கலந்துவிட்டார் என்று நம்பினார்கள்.  சிலர் மத்தியில் இந்தக் கருத்து நம்பிக்கையின் அடிப்படையில் இருந்தது.  திரு அருட்பா கற்றவர்கள் திரு அருட்பாவை மூலதனமாகக் கொண்டு, அதாவது அதை அடிப்படையாகக் கொண்டு, அவர் ஜோதியில் கலந்து விட்டார் என்ற கூற்றை நியாயப்படுத்துகிறார்கள்.  வள்ளலார் தான் ஒரு தனிமனிதர் என்ற நிலைமாறி இறைவனோடு ஒன்றிய உணர்வைப் பெற்றுவிட்டார் என்று நம்புகிறார்கள்.  தெய்வத்துள் வாழும் தெய்வமாக மாறிவிட்டார் என்கிறார்கள்.  மரணமில்லா பெருவாழ்வை இறைவனிடம் வேண்டிப் பெற்றுவிட்டார் என்கிறார்கள்.  வள்ளலார் தன்னை நாயகியாகவும், இறைவனை நாயகனாகவும் பாவித்து இறைவனை ஆன்மீகத் திருமணம் செய்து கொண்டார் என்று பெருமை பேசுகிறார்கள்.  தனக்கு நேரப் போகும் மறைவை வள்ளலார் உணர்ந்திருந்ததாகவும், தான் சித்தியடையப் போவது குறித்து, சன்மார்க்க சங்கத்தார்க்கு இறுதிக் கட்டளை இட்டதையும் அன்பர்கள் சுட்டிக் காட்டுடகிறார்கள்.  அதைப் பார்ப்போம்.

      “சன்மார்க்க சங்கத்தாருக்கு இட்ட இறுதிக் கட்டளை 31.8.1874 ஸ்ரீமுக வருடம் தை 19.  நான் உள்ளே பத்துப் பதினைந்து தினமிருக்கப் போகிறேன்.  பார்த்து அவநம்பிக்கையடையாதீர்கள்.  ஒரு கால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறுவீடாகத்தான் இருக்கும் படி ஆண்டவர் செய்விப்பார்.  என்னை காட்டிக் கொடார்.”
    
     வள்ளலாரின் இந்தக் கடிதத்தை யாரும் சந்தேகிக்கவில்லை.  ஆங்கிலேயரான தென்னாற்காடு மாவட்ட ஆட்சியரும் சந்தேகிக்கவில்லை.  வள்ளலாரின் கடிதம் பற்றி யாரும் விவாதிக்விட்டாலும், மறைவு பற்றிப் புகைச்சல் இருந்திருக்கிறது.  அது தென்னாற்காடு மாவட்ட ஆட்சியரான ஆங்கிலேயர் J.H.GARSTIN என்பவரின் பார்வைக்குச் சென்றது.  மாவட்ட ஆட்சியர் வள்ளலாரைப்பற்றி அறிந்திருக்க வாய்ப்பு இருந்திருக்க வேண்டும்.  அதனால் தான் அவர் மறைவு குறித்த மாறுபட்ட கருத்துக்கள் எழுந்தபோது, தன் கீழ் இருக்கும் அதிகாரிகளை அனுப்பி விசாரிக்காமல் போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்த அந்த நாட்களில், அவரே விசாரிக்க நேரில் வந்தார்.  வள்ளலார் சித்திவளாக அறைக்குள் நுழைந்து உள்ளே தாளிட்டுக் கொண்ட அறையை, ஆங்கிலேய மாவட்ட ஆட்சியர் நினைத்திருந்தால் திறந்திருக்க முடியும்.  அந்த அதிகாரம் அவருக்கு இருந்தது. வள்ளலார் மறைவு பற்றி புகார் இருந்தது.  ஆனால் மாவட்ட ஆட்சியர் சித்திவளாக அறையைத் திறக்கச் சொல்லவில்லை.  அது ஏன்?  திறக்கச் சொல்லியிருந்தால் புதிர் வெளிப்பட்டிருக்கும் அல்லவா?  அறையைத் திறக்கச் சொல்லவில்லை என்பது மட்டும் அல்ல, இருபது ரூபாய் பணம் கொடுத்து ஏழைகளுக்கு உணவு அளிக்கச் சொல்லி இருக்கிறார்.  அதன் பின்னர் தென்னாற்காடு மாவட்ட 1878ம் ஆண்டு மாவட்ட இதழ் தொகுப்பில் அவர் மறைவு பற்றி குறிப்பு வெளியானது.  இக்குறிப்பு மீண்டும் 1906ம் ஆண்டு தென்னாற்காடு மாவட்ட அரசிதழிலும் வெளியானது.  அதைப் பார்க்கலாம்.

    “ …….In 1874, he locked himself in a room (still in existence in Mettukuppam, hamlet of karunguli) which he used for Samadhi or mystic meditation, and instructed his disciples not to open it for some time.  He has never been seen since and the room is still locked.  It is held by those who still believe in him that he was miraculously made one with his God and that in the fullness of time he will reappear to the faithful.
     The report concludes with these words:
      Whatever may be thought of his claims to be religious leader, it is generally admitted, by those who are judges of such matters, that his poems, many of which have been published stand on a his plane, and his story is worth noting as an indication of the directions which religious fervor may still take.”

     பொதுவாக ஆங்கிலேய ஆட்சி இந்தியர்களின் மத, சமய, சடங்குகள் நம்பிக்கைகள் சார்ந்தவற்றில் தலையிடாக் கொள்கையைப் பின்பற்றியது.  இவைகளில் தலையிட்டால் உணர்வுகள் தூண்டப்பட்டு கொந்தளிப்பு ஏற்படும் என்று கருதி தலையீட்டைத் தவிர்த்தார்கள் ஆங்கிலேயர்கள், சிப்பாய் கலகம் என்றும், முதல் சுதந்திரப் போராட்டம் என்றும்  அழைக்கப்பட்ட நிகழ்வுகளிலிருந்து ஆங்கிலேய ஆட்சி சில படிப்பினைகளைக் கற்றுக் கொண்டிருந்தது.  ஆனால் நாம மேலே பார்த்த மாவட்ட ஆட்சியரின் குறிப்பு மறைமுகமாகக் கூட தலையிடாக் கொள்கையைப் பிரதிபலிக்கவில்லை.  மாவட்ட ஆட்சியர் முதலில் மறைவின் நிகழ்வைப் பதிவு செய்கிறார்.  அதன் பின்னர் வள்ளலார் தன்னை ஒரு சமயத் தலைவர் என்று அழைத்துக் கொள்வது பற்றி எத்தகைய கருத்து இருந்தாலும் அவருடைய கவிதைகள் மிகவும் உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டு மதிக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் உணர்ந்தார்.  அதாவது மிகுந்த பக்தர்களை உடைய வள்ளலார் சமயவாதி என்பதில் விதாதத்திற்கு உட்பட்ட போதும், திரு அருட்பா அருளியவர் என்ற நிலையில் மிக உயர்ந்த நிலையில் இருப்பதை மதிப்பிட்ட ஆட்சியர் வள்ளலார்  திருக்காப்பிட்டுக் கொண்ட அறையை அதிகாரம் கொண்டு திறந்து பிரச்சனையில் பிரவேசிக்க விரும்பவில்லை.  அந்த அறை திறக்கப்படாமல் இருக்க திரு அருட்பா ஆங்கிலேய மாவட்ட ஆட்சியரின் மனத்தை ஆட்சி செய்திருக்கிறது என்பது தெளிவு.  திரு அருட்பா வெறும் தோத்திரப் பாடல் அல்ல.  அறிவின் வெளிச்சம்.  வரப்போகும் சமுதாயத்தின் விடிவெள்ளி.  திருஅருட்பா மீது பொது மக்களும் அரசு உயர் அதிகாரிகளும், சமூகத்தின் மேல் நிலையில் இருந்த பெருமக்களும் வைத்திருந்த பற்றும், மதிப்பும் மாவட்ட ஆட்சியரை அதிகாரத்தைப் பயன்படுத்தாமலிருக்க தடுத்தன.  மாவட்ட ஆட்சியரின் செயல் உண்மையிலேயே திகைக்க வைக்கிறது.  கேள்வி கேட்கவே யாரும் இல்லாத காலகட்டத்தில் மாவட்டத்தையே ஆண்டு கொண்டிருந்தவர், கதவைத் திறக்காமல் போனதற்கு, உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்பது மட்டும் காரணமாக இருந்திருக்க முடியாது.  பாமரத்தனமாக நம்பிக்கைகளுக்கு அவர் கனம் கொடுத்திருக்க மாட்டார்.  சமூகத்தில் வள்ளலாருக்கு இருந்த மதிப்பை அவர் திருஅருட்பாவின் பெருமை கொண்டு அளந்தார்.  திருருட்பா சொல்லும் சேதியின் அருமை அவரை பாதித்திருக்க வேண்டும்.  வள்ளலாரை, திருஅருட்பா தந்தவரை மதிக்கும் முகமாகத்தான் மாவட்ட ஆட்சியர் வள்ளலார் தாளிட்டுக் கொண்ட அறையைத் திறக்கச் சொல்லவில்லை என்பது திண்ணம்.

     வள்ளலாரின் தத்துவம் மாவட்ட ஆட்சியருக்குப் புரியாதிருந்தால் இருபது ரூபாய் பணம் கொடுத்து உணவளிக்கச் சொல்லியிருக்க மாட்டார்.  திருஅருட்பா ஒரு புதிய அருட்பா.  இது வெள்ளைக்காரனுக்குப் புரிந்தது.  பின்னர் வந்த பாரதிக்கும் புரிந்தது. 

     “இந்துஸ்தானத்திற்குள் தமிழ்நாடு முதலாவதாகக் கண்விழித்தது.  இராமலிங்க சுவாமிகள் போன்ற மகான்கள் தமிழ்நாட்டின் புதிய விழிப்பிற்கு ஆதிகர்த்தாக்களாக விளங்கியுள்ளார்கள்.”  (பாரதியார் கட்டுரைகள்)

Monday 25 February 2013

தோலுக்கு விருது பெற்ற தோழர்


               தோலுக்கு விருது பெற்ற தோழர்

     சாகித்திய அகாதமி 1955-லிருந்து விருதுகள் தருகின்றன.  முதல் விருது சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளைக்குக் கிடைத்தது என்றாலும் விருது பெற்றவர்கள் பட்டியலைப் பார்க்கும் போது நாவலாசிரியர்களே அதிக விருதுகளை அள்ளிச்சென்றிருப்பதைக் காணமுடியும்.  நாவலாசிரியர்களிலும் உணர்வுப் பூர்வமான முற்போக்கு எழுத்தாளர்களை நோக்கி விருதுகள் பயணிக்கத் தொடங்கியது மிகவும் பின்னால் தான்.  வணிக ஏடுகளில் வாழ்க்கையை, சமுதாயத்தை, மக்களின் போராட்டங்களை முன்னிறுத்தாத பல தொடர்கதைகளும் விருதுகளை வாங்கி இருக்கின்றன.  அந்தப் போக்கு பிற்பட்ட காலத்தில் முறியடிக்கப்பட்டது. இந்த ஆண்டு டி.செல்வராஜின் ‘தோலுக்கு‘ விருது கிடைத்திருக்கிறது.  பொதுவாக, முற்போக்குப் படைப்புகள் மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு தற்போது விருதுகள் பெறுகின்றன.  இது எப்படிச் சாத்தியமாயிற்று என்று செல்வராஜைக் கேட்டபோது, ’இலக்கிய உலகில் நாம் நடத்திய நெடிய போராட்டத்தால் சாத்தியமாயிற்று’ என்றார்.  விருதுகள் வீடு தேடி வர வேண்டுமானால், இலக்கிய உலகில் நாடு தழுவி போராட வேண்டியிருக்கிறது என்றார்.  மேலும் விருதை தனிப்பட்ட முறையில் தனக்குக் கிடைத்ததாக அவர் பார்க்கவில்லை.  தான் சார்ந்த இயக்கத்திற்குக் கிடைத்த விருதாகவே பார்த்தார்.  அது அவர் அடக்கத்தைக் காட்டுகிறது.  அதே சமயம் புறந்தள்ள முடியாத போராளிப் படைப்பாளியாக அவர் நின்று காட்டியதை அங்கீகரிக்க வேண்டிய காலகட்டம் வந்து விட்டது என்பதையும் சொல்லாமல் சொல்கிறது அல்லவா?

     நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே செல்வராஜின் ’மலரும் சருகும்’ என்ற நாவல் தமிழ் இலக்கியத்தில் முத்திரை பதித்துவிட்டது.  அடுத்து சில ஆண்டுகளில் வெளிவந்தத் ’தேனீர்’ சிறந்த நாவல் என்ற பெயரைக் கொள்முதல் செய்துவிட்டது.  இந்த இரண்டு நாவல்களிலுமே அவர் உயரத்திற்குப் போய்விட்டார்.  செல்வராஜின் உயரத்தைத் தொட விருதுகள் தான் ஆமை வேகத்தில் நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்தன. விருது கிடைத்தது தாமதமாகத்தான்.  இருந்தாலும் ஒரு ஆறுதல்.  பாரதிதாசன், கண்ணதாசன் போல் கருமாதிக்குப் பிறகு தரப்படவில்லை அல்லவா?

     நாவலாசிரியராக அறியப்பட்டாலும், முதலில் சிறுகதைதான் எழுதினேன் என்கிறார் செல்வராஜ்.  ஆனால் என்ன கொடுமை.  அந்தச் சிறுகதைகள் அவர் கைவசம் இல்லையாம்.  இது அவருக்கு மட்டுமா இழப்பு?  விருது கிடைத்ததும் செல்வராஜை ஓடிப்பிடிப்பதும், வர்ணனை செய்வதும் ஊடகங்களின் வாடிக்கையாகிவிட்டது.  இது ஆரோக்கியமான போக்கு அல்ல.  அவரை முன்பே அடையாளம் கண்டிருக்க வேண்டும்.

     நசுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்றால்,  அவர்கள் எப்படி ஒன்று சேர்ந்து சங்கம் கண்டார்கள் என்பதைச் சொல்ல வேண்டும் அந்தச் சங்கத்திற்கு வழிகாட்டும் தத்துவம் பற்றிப் பேச வேண்டும்.  அந்தத் தத்துவம் தமிழ்நாட்டில் வளர்ந்து கட்டமைத்துக் கொண்ட வரலாற்றைச் சொல்ல வேண்டும்.  இதை ’தோல்’ சரியாகச் சொல்கிறது.  இதற்குக் களமாக நவீன தொழிற்சாலைகளைக் கொள்ள முடியாது.  அதனால்தான் நாவல் பின்நோக்கிச் சென்று 1930கள் முதல் 1950களின் கடைசி வரை படர்ந்து செல்கிறது.                 வர்க்கப் போராட்டத்தோடு சாதி ஒழிப்பை இணைக்கவேண்டும் என்பது இன்றைய குரல் என்றாலும், அன்றே நடைமுறையில் இருந்தது என்பதை செல்வராஜ் என்னும் படைப்பாளி உணர்ந்திருந்தார்.  அதற்கு ஆதாரம் தான் தோல்.  எனவே இது முற்போக்கு இலக்கியத்திலும் ஒரு திருப்புமுனை.  ’தோல்’ நாவலுக்கு செல்வராஜ் ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார்.  அது பற்றிக் கேட்ட போது, ’தோல் நாவல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் என்னுடைய முன்னுரை’ என்றார்.  உண்மைதான், நாவலின் கதை மாந்தர்கள் வீரர்கள் அல்லர்,   வஞ்சிக்கப்பட்டவர்களே என்று ரோமண்ட் வில்லியம்சை மேற்கோள் காட்டி முன்னுரையில் பேசுகிறார்.  அதாவது கல்கிகால வரலாற்றுப் புதினங்களைத் தாண்டி நேர் மாறான இலக்கியச் சாலையில் நாவல்கள் முன்னேறிச் செல்கின்றன என்கிறார் அவர்.  அது மட்டுமல்ல, தீண்டாமை எதிர்ப்பு வெறும் சமூகச் சீர்திருத்தமாகப் பார்க்கப்பட்டது போய், அது பழங்கதையாய் மரித்துப் போய் வர்க்கப் போராட்டமாய், சமூக விடுதலையாய் பரிணாமம் கொண்டதையும் குறிப்பிடுகிறார்.  தோல் ஒரு வர்க்கப் போராட்ட நாவலாகவும், தலித் நாவலாகவும்,  கம்யூனிச இயக்கத்தின் ஒரு முப்பது ஆண்டுகால வரலாற்றைப் பதிவு செய்யும் நாவலாகவும் அடைந்திருக்கிறது.  எனவே நாவலின் பரப்பளவு அதிகமாகத்தானே இருக்க வேண்டும்?  அதற்கு ஏற்ப பாத்திரங்கள் இடம் பெற வேண்டாமா?

     ’தோல்’  நாவலில் 117 பாத்திரங்கள் உட்புகுந்து நாவலை இயக்குகின்றன.  இவ்வளவு பாத்திரங்கள் உள்ள நாவல் வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.  எண்ணற்ற பாத்திரங்கள் இருப்பது ஒரு காவியப் பண்பு.  அந்த பண்பு இந்த நாவலில் இருக்கிறது.  காவியம் அரண்மனைகளையும், அந்தப்புரங்களையும் பேசும்,  ஆனால் ’தோல்’ தோழர்களின் போர்க்குணத்தையும், தியாகத்தையும் பேசுகிறது.  பல பாத்திரங்கள் உண்மைப் பாத்திரங்கள்,  நேற்று வாழ்ந்த மனிதர்கள்.

     பொதுவுடைமைக்கட்சி வெள்ளைக்காரன் ஆட்சியில் மட்டும் அல்ல, சுதந்திர இந்தியாவிலும் தடை செய்யப்பட்டது.  1952 பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்டுகள் பெற்ற வெற்றிக்குப் பிறகு தடை விலக்கப்பட்டது.  உழைக்கும் மக்களின் விடுதலைக்காகத் தங்களை அர்பணித்துக் கொண்ட தலைவர்கள், தங்கள் திருமண வாழ்க்கையை ஒதுக்கி வைத்திருந்தார்கள்.  தடை விலக்கப்பட்ட பிறகு திருமண வாழ்க்கையையும் மேற்கொண்டார்கள், எல்லாம் சாதி மறுப்புத் திருமணங்கள், புரோகிதம் விலக்கிய திருமணங்கள், செல்வராஜ் தன் நாவலைத் திருமணத்தோடும், போராட்டத்தோடும் முடிக்கிறார்.

     ’யார் என்ன கோணத்தில் பார்த்தாலும் என் படைப்பின் நோக்கம் தெளிவானது’  என்கிறார் செல்வராஜ்.
     அவர் படைப்பின் நோக்கம் என்ன?
     சோக்ஷலிச எதார்த்தம்
     அவரின் நோக்கம் நிறைவேறி இருக்கிறதா? 
     நிறைவேறி இருக்கிறது.

     இது படிப்பவர்களுக்குத் தெரிகிறது.  ஆனால் படிக்காத (அதாவது நாவலைப் படிக்காத)  ஜெயமோகனுக்குத் தெரியவில்லை.  பொறாமையில் பாவம் புலம்புகிறார்.  விருது கிடைத்தால் ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டியதுதானே என்று ஆலோசனை சொல்கிறார்.  இவருக்கு விருது கிடைத்தால் ஓய்வு எடுத்துக்கொள்வாரா?  இலக்கிய உலகிற்கு உறுதிமொழி அளிப்பாரா?  ஒரு நல்ல இலக்கியவாதி இப்படி எல்லாம் பேசக்கூடாது.

     சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து ஓய்வு எடுக்க செல்வராஜ் விருது வாங்கவில்லை.  அடிமை விலங்கை உடைத்து நொறுக்குவதற்க விருதை ஒரு சுத்தியலாக அவர் பயன்படுத்துவார்.  சாகித்திய அகாதமி தன்னை அறியாமலே ஒரு ஆயுதத்தை டி.செல்வராஜீக்கு வழங்கி இருக்கிறது.

Thursday 17 January 2013

நான் கண்ட சென்னை

                                               நான் கண்ட சென்னை

18.01.2013                                   சிகரம்.ச.செந்தில்நாதன்

     சென்னை நகரம் தோன்றி 360 ஆண்டுகள் ஆனதை முன்னிறுத்தி, சென்னை நகரின் தோற்றம், வளர்ச்சி, அதில் ஏற்பட்டுள்ள சகலவிதமான அக, புற மாற்றங்கள் பற்றி ஏராளமான கட்டுரைகள் பல்வேறு இதழ்களில் போட்டி போட்டுக் கொண்டு வெளியாகி இருக்கின்றன.  என்றாலும் சென்னை பற்றி சொல்ல மறந்த கதைகளும், பார்க்க மறுத்த காட்சிகளும் உண்டு.  அவற்றைச் சொல்லும் முயற்சிதான் இந்தக் கட்டுரை.

     நான் சென்னைக்கு 1959 ஆம் ஆண்டு வந்தேன்.  திருவாரூரில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த நான் மேல் படிப்பிற்காக சென்னையை அடைந்தேன்.  அந்த ஆண்டுகள் கல்லூரிப் படிப்பில் சில மாற்றங்கள் நேர்ந்த ஆண்டுகளாகும்.  கல்லூரிகளில் முன்பெல்லாம் முதலில் இன்டர் மீடியட் என்ற வகுப்பில் படிக்க வேண்டும்.  அது இரண்டு ஆண்டாகும்.  அதை முடித்த பின்னர் தான் பி.ஏ,, பி.எஸ்.சி. போன்ற பட்டப் படிப்பிற்குப் போக வேண்டும்.  அந்தப் பட்டப் படிப்பும் இரண்டு ஆண்டுகள் தான்.  இன்டர் மீடியட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றால்தான் மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.  கல்லூரிகளில் இருந்த இன்டர் மீடியட் வகுப்பு எடுக்கப்பட்டது.  அதற்குப் பதில் பி.யு.சி. எனப்படும் புகுமுக வகுப்பு நுழைக்கப்பட்டது.  அதுமட்டும் அல்ல, மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கும் நுழைவு வகுப்புகள் கல்லூரிகளிலேயே வைக்கப்பட்டன.
     ஏன் இந்த மாற்றம்?
கல்வியாளர்கள் இந்த மாற்றத்தைச் செய்ய சில காரணங்களைச் சொன்னார்கள்!
     அப்போதெல்லாம் கிட்டதட்ட பள்ளிகளில் எல்லாம் தமிழ் வழிக் கல்விதான் உண்டு.  பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்கள், நேராக இன்டர் மீடியட் சேரும் போது, அதாவது ஆங்கில வழி பயிற்சி மொழிக்கு மாறும் போது சிரமப்படுகிறார்கள் என்றும், அதனால் இன்டர் மீடியட் என்னும் இரண்டாண்டு படிப்பிற்குப் பதில் பட்டப் படிப்பை மூன்றாண்டாக்கி,  ஓராண்டு புகுமுக வகுப்பைக் கொண்டுவந்து, இன்டர் மீடியட் படித்து பாதியில் கல்லூரிப் படிப்பை விடுவதைவிட, ஓராண்டு படித்து ஓடிவிடட்டும் என்று நினைத்தார்கள்.  ஆங்கில வழிக் கல்விக்கும், கல்லூரி வாழ்க்கைக்கும் மாணவன் பக்குவப்பட வேண்டும் என்றும் நினைத்தார்கள்.  இந்தத் திட்டம் நல்ல திட்டம் அல்ல.  அதனால்தான் பின்னர் புகுமுக வகுப்பு ஒழிக்கப்பட்டது.  அதற்குப் பதில் பள்ளி இறுதி வகுப்பிற்குப்பின்  +2 கொண்டுவந்தார்கள்.  இன்டர் மீடியட் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.  அந்த இரண்டு ஆண்டுகள் கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு வந்த மாணவர்களுக்கு ஆங்கில வழியில் பயிற்சி பெறவும் கல்லூரிக் கலாச்சாரத்தோடும், வாழ்வோடும் இணைவதற்கும் தேவைப்பட்டது.

     நான் புகுமுக வகுப்பில் சேர்ந்தேன்.  சென்னை வாழ்க்கை எனக்குப் புதியது.  சென்னைத் தமிழ் மேலும் புதியது.

     சென்னை நனரில் கணிசமான அளவு தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இருந்தார்கள்.  அவர்கள் வெளியில் தமிழ் பேசினாலும் வீட்டில் தெலுங்கு பேசுவார்கள்.  என்றாலும் தெலுங்கின் செல்வாக்கு நடை முறையில் இருந்தது.  ஆற்காட்டு நவாபுகள் கட்டுப்பாட்டிலும், பின்னர் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டிலும் நகரம் இருத்ததும் மொழியில் தெரிந்தது.  பிற மாவட்டங்களிலிருந்து, குறிப்பாக ஆந்திரா பிரிந்த பிறகு, சென்னைக்குக் குடியேறியவர்களால் சென்னை மொழி மாற்றம் கண்டது என்று சொல்லலாம்.  தமிழ் நாட்டிலிருந்து ஆந்திரா பிரிந்த போது, சென்னை எங்களுக்கு வேண்டும் என்று சென்னை வாழ் தெலுங்கு மக்கள் கோரிக்கை வைத்ததிலிருந்து சென்னையில் அவர்களின் "இருப்பை" மதிப்பிட்டுக் கொள்ளலாம்.  "மதராஸ் மனதே" என்று ஊர்வலம் எல்லாம் நடந்தது உண்டு.  நான் ஆந்திரா பிரிந்த பிறகு சென்னைக்கு வந்தவன்.  அன்றைய சென்னைத் தமிழை அனுபவித்தவன்,
                                                  …வளரும்…