Friday 7 December 2012

இனியனின் ‘ சமயங்களின் பின்புலத்தில் தமிழக வரலாறு ’

                      நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தமிழகத்தின் வரலாறு, சமய வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தே கிடக்கிறது.  சங்க காலத்திலேயே சமயக் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளன எனினும், சங்கம் மருவிய காலத்திற்குப் பிறகு, அவை விரைந்து தலைதூக்குகின்றன.  பல்லவர் காலம்,பிற்காலச் சோழ, பாண்டியர் காலம், நாயக்கர் காலம் என்பனவெல்லாம் சமயங்களின் ஆட்சி நடந்த காலம் என்றே கூற வேண்டும்.  அதனால்தான் இடதுசாரியரான வழக்குரைஞர் ச.செந்தில்நாதன், அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை என்னும் நூலில், தமிழக வரலாற்றைச் சமயப் பின்புலத்தில் ஆய்வு செய்கின்றார்.

                       மூவேந்தர் ஆட்சிக் காலம் முடிந்து, ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலம் தொடங்கிய காலம் வரையிலான இடைக்கட்டம் பல்வேறு மரபுகளைச் சார்ந்த மன்னர்களால் ஆளப்பட்டது.  அக்காலகட்டத்தையே தன் ஆய்வுப் பொருளாக நூலாசிரியர் அமைத்துக் கொண்டுள்ளார்.  இசுலாமியர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் எனப் பலரும் தமிழகத்தை ஆண்ட காலம் அது.  தமிழ்மொழி தன் செல்வாக்கு இழந்து, பிற மொழிகள் கோலோச்சிய காலம் என்றும் அதனைக் கூறலாம்.  அந்நிலையில் தமிழைத் தாங்கிப் பிடித்தவர்கள், சமயங்களின் மீது நம்பிக்கை கொண்ட புலவர்கள் சிலரே என்பதை இந்நூல் நமக்குக் காட்டுகின்றது.

                         அருணகிரிநாதர் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.  கி.பி.1424 முதல் 1447 வரை ஆட்சி நடத்திய விஜயநகர மன்னன் இரண்டாம் தேவராயனின் காலத்தில் அவர் வாழ்ந்திருக்கக் கூடும் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிக்கின்றனர்.  எனினும் அருணகிரிநாதரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் குறைவாகவும், கற்பனைக் கதைகளே கூடுதலாகவும் நமக்குக் கிடைக்கின்றன.  அவருடைய பாடல்களைக் கொண்டே நாம் சில ஆய்வுகளை நிகழ்த்த வேண்டியுள்ளது.

                            அருணகிரிநாதரின் முருக வணக்கப் பாடல்கள் வெறும் ஆன்மீகம் என்று நாம் ஒதுங்கி விட முடியாது.  அங்கொன்றும் இங்கொன்றும்க சங்க இலக்கியங்களில் முருகன் பற்றிய செய்திகள் காணப்பட்டாலும், பிறகு முருக வழிபாடு அருகிலேயே காணப்பட்டது.  சமண பவுத்த காலங்களும், சைவ வைணவக் காலங்களுமாய்த் தமிழக வரலாறு நடை போட்டது.  முருகன் சைவ மரபைச் சார்ந்து வழிபடப்பட்டாலும், அங்கு சிவனுக்கே முற்றும் முதலான முதல் இடம் வழங்கப்பட்டது.  கச்சியப்ப முனிவர் படைத்தளித்த, கந்த புராணம் கூட, பார்ப்பன மயமாக்கப்பட்ட கந்தனையும், கார்த்திகேயனையுமே நமக்குக் காட்டுகின்றது.  முருகன் அங்கே தென்படவில்லை.


                              தமிழ்க் கடவுள் என்று நமப்ப்பட்ட முருகனை அருணகிரிநாதரே மீண்டும் அரங்கிற்கு அழைத்து வருகிறார்.  பல்வேறு புதிய புதிய சந்தங்களில் அவர் படைத்த பாடல்கள் முருக வழிபாட்டை மட்டும் மேம்படுத்தவில்லை, தமிழ் உணர்வையும் சேர்த்தே மேம்படுத்தியது என்பது செந்தில்நாதன் முன்வைக்கும் வாதம்.  அருணகிரிநாதரின் குரல் தமிழ்க் குரல் என்கிறார் அவர்.

                              சைவ ஆதீனங்கள் என்று கூறப்படும் சைவ மடங்கள் குறித்துப் பல அரிய தகவல்களை இந்நூல் தருகின்றது.  பிற்காலச் சோழர்கள் சைவ மதத்தை உயர்த்திப் பிடித்தார்கள் என்று நாம் படிக்கிறோம்.  ஆனால் அவர்கள் உயர்த்திப் பிடித்தது சித்தாந்த சைவமன்று, வைதீகச் சைவமே என்பதைச் சான்றுகளுடன் இந்நூல் நிறுவுகிறது.  அதனால்தான் சைவ மதங்கள் எவையும் சோழர் காலத்தில் கட்டப்படவில்லை.  வைணவ சமயத்தைச் சார்ந்து நின்ற நாயக்க மன்னர்களின் காலத்திலேதான் அம்மடங்கள் உருவாகியுள்ளன.  இது ஒரு பெரிய வரலாற்று முரணாகும்.  பார்ப்பனர்களால் வழிநடத்தப்பட்ட சோழ மன்னர்கள், பார்ப்பனர்கள் மட்டுமே மடங்களை நடத்த வேண்டும் என்னும் போலிக்கோட்பாட்டுக்கு உடன்பட்டனர்.  பார்ப்பனர் அல்லாதார் கட்டிய சில மடங்களை இடித்தும் இருக்கிறார்கள்.  இதனையே வரலாற்று ஆசிரியர்கள் குகையிடிக் கலகம் என்று அழைக்கின்றனர்.

                               தமிழ்நாட்டில் 18 சைவ மடங்கள் இருந்தன என்று குறிப்புகள் உள்ளன.  எனினும் இன்றைக்கு ஏழு மடங்கள் மட்டுமே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.  இராமேசுவர ஆதீனம், சிவப்பிரகாச ஆதீனம் போன்றவை இன்று முற்றிலுமாய் அழிந்து விட்டன.  வேறு சில மடங்கள் பெயரளவில்தான் இருக்கின்றன.

                               தாயுமானவர், குமரகுருபரர், சிவப்பிரகாசர், அண்ணாமலை ரெட்டியார் ஆகியோரைப் பற்றியும் பல குறிப்புகள் நூலுள் இடம் பெற்றுள்ளன.  இறுதி இயல் வள்ளலாரைப் பற்றி விரிவாகவும், நிறைவாகவும் பேசுகின்றது.  சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய இராமலிங்க அடிகளாரே,  இன்றைய தமிழ்த் தேசியக் கோட்பாட்டின் வேராக விளங்குகின்றார் என்பதும் இந்நூலில் காணப்படும் செய்தி.


         -சிகரம்.ச.செந்தில்நாதன் எழுதிய‘அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை’ என்னும் நூல்  பற்றி இனியன்.


                                                                                                                    நன்றி,

                                                                                                        கருஞ்சட்டைத்தமிழர்

1 comment:

  1. a very informative book looking things at a different angle and from a different perspective.in fact i participated in the book releasing function-rajasekaran

    ReplyDelete