Saturday 22 December 2012





            மறுவாசிப்பை முன்மொழியும் நூல்
                        
                                                   …ஜனநேசன்…

    படைப்பாளி படைப்பை முன்வைப்பான், திறனாய்வாளன் படைப்பின் உள்ளடக்கம், அதன் நோக்கம், படைப்பு சமூகத்தில் உருவாக்கும் தாக்கம் போன்றவற்றை எடுத்துரைப்பவன்.  அவனது எடுத்துரைப்பு பல நல்ல படைப்புகளை அடையாளம் காட்டும்.  ஆக சமைப்பவனைப்போல் சுவைப்பவனும், கலைஞனைப் போலவே சுவைஞனும் முக்கியமானவர்கள், தவிர்க்க முடியாதவர்கள், படைப்பு முயற்சி முடிந்த பின்னும், சமூகச் செலவாணிக்கு திறனாய்வாளனின் பங்கு முக்கியமானது, அவசியமானதும் கூட.
     இந்தப் புரிதலில்தான் ’சிகரம்’ செந்தில்நாதனின் திறனாய்வுகள் என்னும் நூலினை எதிர்கொள்கிறோம்.  இந்நூலில் 5 திறனாய்வுக் கட்டுரைகளும், 26 மதிப்புரைகள், அணிந்துரைகளும் என இருபகுதியாக கட்டுரைகள் இடம் பெற்று உள்ளன.
      முதல் பகுதியில் முதல் கட்டுரை ’விந்தன் நாவல்கள் எனும் கட்டுரை’ விந்தன் எழுதிய நாவல்கள் குறித்து ஒரு மறுவாசிப்பை முன்மொழிகிறது.  இக்கட்டுரையில் சிகரம் செந்தில்நாதன் ஒரு முக்கியமான கேள்வியை முன் வைக்கிறார் – ‘அமைப்பு சாராத படைப்பாளியாக இருப்பது பலமா? பலவீனமா?’   அமைப்பு சாராத படைப்பாளி ஒரு சமூகப் பிரச்சனைக்காக தீர்வை எப்படி யதார்த்தமாக முன் வைக்கிறார் என்பதனை விந்தன் எழுதிய ‘பாலும் பாவையும்’ என்ற நாவலை முன் வைத்து விளக்குகிறார்.  விந்தன், புதுமைப்பித்தன் முதலான அமைப்பு சாரா படைப்பாளிகளின் படைப்புகளில் காணப்படும் முற்போக்குத் தன்மையைவிட நம்பிக்கை வறட்சியும் இருண்மை நோக்கும் (PESSIMISM) தூக்கலாக பதிந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.  இந்தக் கட்டுரையை சுத்தம் சுயபிரகாரம் இலக்கியவாதிகள் வாசிக்க வேண்டும்.
     இரண்டாவது கட்டுரையில் கல்கியின் இரு நாவல்களான
’சிவகாமியின் சபதத்தையும், அலைஓசையையும் மறுவாசிப்புக்கு உட்படுத்துகிறார்’. 
     மகேந்திர பல்லவன் மாறுவேடத்தில் நிகழ்த்தும் பல ஜாலங்கள் அன்று திகைக்க வைத்தன.  மறுவாசிப்பில் இன்று அப்படி இல்லை.  மகேந்திரவர்மனின் பல அதிரடிகளும் ஓரிரு வேலையும் மாறுவேடங்களும் இன்று நம்பும்படியாக இல்லை.  ஒரு சினிமாத்தனம் சிறகடிக்கிறது.  பல்லவ நாட்டுச் சக்கரவர்த்தி வாதாபி புலிகேசியின் நம்பிக்கைக்குரிய ஒற்றுப்போல் சித்தரிக்கப்படுவதும், அவர் திடீர் திடீர் என்று எல்லா இடங்களில் தோன்றுவதும் ஜீரணிக்கமுடியாதவை.  நாகநந்தியின் மாறுவேடமும் அப்படித்தான்.  நாகநந்தி புலிகேசியாய் உருவெடுப்பதும் அந்தக்காலத்தில் சுரங்கப்பாதைகள் இருந்தன என்பதற்காக அதீத கற்பனையில் வாசகனைத் தள்ளுவது என்பதெல்லாம் ஒரு நல்ல இலக்கியப் படைப்பிற்கு உள்ளே வரவேண்டிய அம்சமல்ல.  ’நாவலின் முடிவிலே சிவகாமி கோயிலிலே தாலி கட்டிக் கொள்கிறாள்.  பிற்காலச் சோழர் காலத்தில் வரப்போகும் தேவதாசி முறைக்கு, பொட்டுக்கட்டும் முறைக்கு, இது முன்னோட்டமா?  கல்கி அறிந்தோ அறியாமலோ நாட்டியக்காரிகளின் சமூக நிலையைக் கண்முன் நிறுத்துகிறார்’.
     நாவலுக்கு ஒரு வரலாற்றுத் தோற்றத்தை தருவதற்கு சிறுத்தொண்டர், திருநாவுக்கரசர், குலச்சிறையார், மங்கயர்க்கரசி, பாண்டியன், சோழன், பல்லவர்கள் போன்ற உண்மை மாந்தர்களை இணைத்துள்ள கல்கி, சைவ, சமண, புத்த சமயப் போராட்டங்களையும் பின்களமாக அமைக்கிறார்.  ஆனால் சமயப் போராட்டங்களைச் சித்தரிப்பதில் சார்புநிலை தெரிகிறது.
      இதே போல் ’அலை ஓசை’ நாவல் சுதந்திரப்போராட்ட நாவல் என்று சொல்லப்பட்டாலும், இந்நாவலுக்கு சுதந்திரப்போராட்டம் பின்னணிதானே தவிர சுதந்திரப்போராட்ட நாவலல்ல.  காரணம், சுதந்திரப்போராட்டமும் சம்பவங்களின் எதார்த்தமும் அழுத்தமாகப் பதியாமல் இருக்கிறது.  கதையின் பெரும்பகுதி வடநாட்டில் நடக்கிறது.  அவர்கள் வடநாட்டு வாழ்க்கையோடு ஒன்றவில்லை.  வாசகன் மனத்தில் வடநாட்டு வாழ்க்கை பதியவில்லை.  இப்படி ஒன்றுமே இல்லாமல் ஆயிரம் பக்கம் நாவல் வந்திருக்கிறது.  கல்கி ஒரு நல்ல கதை சொல்லி என்பதைக் காட்டுகிறது. 
     நாவலின் முக்கிய பாத்திரம் சூரியா மகாகவி பாரதி பற்றி ”பாரதியார் என்ன சொல்லி இருந்தால் இப்போது என்ன?  (காதல் பற்றிதான்) …………………………………………………..   அவர் சொன்னதெல்லாம் சரி என்று நான் ஒப்புக்கொள்ளவில்லை.  பாரதியாருக்கு அறிவு தெளிந்திருந்தபோது தேசத்தின் சுதந்திரத்தைப் பற்றி பாடினார்.  கொஞ்சம் மயக்கமாய் இருந்தபோது காதலைப்பற்றிப் பாடினார்” என்று சொல்லுவதில் கல்கியின் நோக்கம் என்ன என்பதை கல்கியின் வரலாற்றை யோசித்து பார்த்தால் நமக்கு பல விக்ஷயங்கள் புரியும்.   இப்படி எத்தனையோ கல்கியின் பார்வைகளை மறுவாசிப்பின் மூலம் புரிந்து கொள்ள முடியும் என்று சிகரம் செந்தில்நாதன் எடுத்துரைக்கிறார்.
     தொ.மு.சி. ரகுநாதனின் பஞ்சும் பசியும் நாவல் குறித்தும், திரு.வி.க. எழுதிய பெண்ணின் பெருமை நூல் குறித்தும் மறுவாசிப்பு செய்து இவ்விரு நூல்களின் சிறப்பையும், நிறை குறைகளையும் நயமாகச் சுட்டிக் காட்டியுள்ளார் செந்தில்நாதன்.
     மேற்குறித்த கட்டுரைகள் தவிர 26 கட்டுரைகளில் மதிப்புரையும், அணிந்துரையும் கலந்து கோர்த்துள்ளார்.  ஒவ்வொரு கட்டுரையும் சமூக நோக்கில் விரிந்த ஆழ்ந்த பார்வையில் சுருக்கமாகவும், சுவையாகவும் குறை நிறைகளை நயம்பட உரைப்பதாகவும் உள்ளன.
                                   …நன்றி…
                             புதிய புத்தகம் பேசுது

1 comment:

  1. i read this book and found it very interesting-rajasekaran

    ReplyDelete