Sunday, 25 November 2012

படிக்க வேண்டிய ஒரு புத்தகம்

                                 

            அனைவரும் படிக்க வேண்டிய, குறிப்பாக இடதுசாரிகள் படிக்க வேண்டிய ஒரு முக்கிய நூல் அண்மையில் வெளிவந்துள்ளது.  அந்த நூல்ஆங்கில நூல்.  'Socialism is the future" என்று சோஷலிசத்திற்கே எதிர்காலம் என்று அடித்துச் சொல்லும் நூல்.  டாக்டர்.ரெக்ஸ் சற்குணம் எழுதியிருக்கிறார்.

                                         எதிர்காலம் சோஷலிசத்திற்கே என்று நாம் சொல்லவேண்டுமானால், நமக்கு சோஷலிசம் பல நாடுகளில் வளர்ந்த வரலாறு, வீழ்ந்த வரலாறு, இன்று இருக்கும் சோஷலிச நாடுகளின் நிலைமை முதலியன நமக்கு தெரியவேண்டும் அல்லவா?  அந்த வரலாறுகள் எல்லாம் இந்த நூலில் அடங்கியிருக்கின்றன.  இந்த வரலாறுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டால்தான் எதிர்காலம் சோஷலிசத்திற்கே என்று மார்த்தட்டி உரத்த குரலில் பேசமுடியும்.  அதற்குத் துணை புரியும் நூல் இது.  அந்த வகையில் இது ஒரு சிறிய கலைக் களஞ்சியம்.  சீனாவின் இன்றைய நிலையை கடுமையாக விமர்சித்திருக்கிறார் ரெக்ஸ்.சற்குணம்.  அவர் எழுதுகிறார்,

                                  "Mao had wanted to create a new man - Communist man : But today Socialist China has created only a capitalist man"

                                   இப்படி சொல்லும் ஆசிரியர் மாவோவின் மீதும் தன் விமர்சனப் பார்வையை செலுத்தத் தவறவில்லை.  மாவோவின் கலாச்சாரப் புரட்சி கட்டுப்பாட்டை இழந்ததன் விளைவுகளைச் சுட்டுக்காட்டுகிறார்.

                               " Let a hundred flowers bloom, a hundred schools of thought contend"

                                  என்று சொன்ன மாவோவை, லெனினை எந்த உயர்ந்த பீடத்தில் வைத்துப் பார்க்கிறாரோ அப்படியே மாவோவையும் வைத்துப் பார்க்கிறார்.

                                    மனித குல வரலாற்றில் மனிதனே மனிதனைச் சுரண்டும், சுரண்டல் சமுதாயததிற்கு முற்றுப் புள்ளி வைத்த சோவியத் யூனியனின் எழுச்சி பற்றியும், பின்னர் அதன் வீழ்ச்சி பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார் ஆசிரியர்.  ஸ்டாலினின் சொல்லும் செயலும் மாறுபட்டதன் விளைவு, பொது வுடைமைக் கட்சியின் மேன்மை என்ற கோட்பாடு, மற்ற நிர்வாகம், நீதித்துறை முதலியனவற்றைப் பின்னுக்குத் தள்ள, மக்கள் என்ற பெயரில் சர்வாதிகாரம் நிலை கொண்டதையும், பின்னர் அதுவே சோவியத்தின் வீழ்ச்சிக்கு வழி வகுத்ததையும் சுட்டிக் காட்டுகிறார்.

                                      லத்தீன் அமெரிக்க சோஷலிச நாடுகள் உட்பட பல்வேறு சோஷலிச நாடுகள் பற்றியும் ஆசிரியர் எழுதியுள்ளார்.  அந்த நாடுகளையும் விமர்சனத்தோடுதான் பார்த்திருக்கிறார்.  இந்தியா பற்றியும் தனியாக ஒரு அத்தியாயம் இருக்கிறது.  அதில் விமர்சனம் மென்னையாக இருக்கும்.

                                         உலக சோஷலிச நாடுகள் பற்றி எல்லாம் எழுதிய டாக்டர்.ரெக்ஸ்.சற்குணம்  எதிர்காலம் சோஷலிசத்திற்கே என்று வாய்ச்சொல் வீரராகச் சொல்லவில்லை.  அது எப்படி சாத்தியம் என்பதையும் சொல்கிறார்.

                                           புரட்சிகரமான கட்சி இல்லாமல் புரட்சி இல்லை.  புரட்சி இல்லாமல் சோஷலிச சமுதாய அமைப்பு இல்லை.  எனவே புரட்சிகரமான கட்சி வேண்டியிருக்கிறது.  புரட்சிகரமான கட்சி சாதிக்க வேண்டுமானால் அதற்கு மத்தியத்துவம் (Centralism) இருக்க வேண்டும்.  அது ஜனநாயக மத்தியத்துவமாக (Democratic Centralism) இருக்க வேண்டும்.  இதைத்தான் லெனின் சொன்னார்,ரோசலுக் சம்பர்க் விளக்கம் தந்தார்.  கிராம்சி வழிசாட்டினார்.  இவர்கள் காட்டிய வழியைப் புரிந்து கொண்டு பயணம் மேற்கொண்டால், சோஷலிசம் வெறும் கனவான இருக்காது, எட்டாக் கனியாக இருக்காது, தொடுவானமாக இருக்காது.  மாறாக கனவு மெய்ப்படும்.  இதுதான் இந்த நூலின் செய்தி ;-
                                    " Hence it could be definitely affirmed that for a left party striving for socialism, Leninist's Democratic Centralism within the scope of Rosa Luxemburg's definition on Absolute Freedom and Gramsci's guidelines, is absolutely essential"

இந்த நூலின் விலை ரூ.200/-  பக்கம் 184.  கிடைக்கும் இடம்:  ரோசா வெளியீட்டாளர்கள், எண் 2, இரண்டாவது பிரதான சாலை, கஸ்தூரி பாய் நகர், அடையார், சென்னை - 600 020.









Sunday, 18 November 2012

முனைவர். இரா.காமராசுக்கு வாழ்த்து

                         சாகித்திய அகாதமியின் மத்திய பொதுக்குழு உறுப்பினராக

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் இரா.காமராசு

நியமிக்கப்பட்டிருக்கிறார்.இரண்டு காரணங்களுக்காக இந்த நியமனத்தை

வரவேற்கிறேன்.  முனைவர் இரா.காமராசை வாழ்த்துகிறேன்.  இவர் புதிய

தலைமுறையைச் சேர்ந்தவர் என்பது ஒரு காரணம்.  சாகித்திய அகாதமியில்

பல முற்போக்குச் சிந்தனையாளர்கள் இடம் பெற்றிருந்தாலும், தத்துவார்த்த

ரீதியாக தன்னைப் பிணைத்துக் கொண்டவர் அவர்.  தமிழ்நாடு கலை

இலக்கியப் பெருமன்றத்தின் தலைவர் அல்லவா அவர்?  இந்தத் தகவலை

மட்டும் பல பத்திரிகைகள் சொல்லவில்லை.  ஏன்?

Friday, 16 November 2012

ஒரு சொல்


                         மங்களம் நாவலை வெளியிட்டிருப்பது சந்தியா பதிப்பகம்.  நான் சென்ற ஆண்டு எழுதிய ஒரு நூல் " முருகன் வணக்கத்தின் மறுபக்கம்".  அந்த நூல் பற்றி ஒரு குறிப்பு.
                                       

                                         
                           நாட்டின் மக்கள் இரண்டு வகையில் ஆளப்படுகிறார்கள்.  நாட்டின் நாடாளுமன்றம் மாநிலங்களின் சட்டமன்றம் ஆகியவை இயற்றும் சட்டங்கள், நிர்வாகம் செய்யும் அதிகாரவர்க்கம், சட்டத்தை அமல்படுத்தவும், சட்ட மீறலைத் தடுக்கவும் வல்ல நீதிமன்றம் இவைகளின் மூலம் அரசியல் ரீதியாக மக்கள் ஒரு வகையில் ஆளப்படுகிறார்கள்.  அரசு இயந்திரங்களால் மக்கள் ஆளப்படுவது புறச்சக்திகளின் ஆளுகையாகும்.  மக்கள் இன்னொரு வகையிலும் ஆளப்படுகிறார்கள்.  அதாவது மக்கள் சமூகத்தால் (Civil Society) ஆளப்படுகிறார்கள்.  வேறு சொற்களில் சொன்னால் அகச் சக்திகளால் ஆளப்படுகிறார்கள்.  அகச் சக்திகள் மக்களின் நம்பிக்கைகள்.  அவைகள் ஒன்றல்ல, இரண்டல்ல பல.  கடவுள் பக்தி, நாள் பார்த்தல், நட்சத்திரம் பார்த்தல், ராகுகாலம், எமகண்டம், அக்ஷ்டமி, நவமி, தெய்வக்குற்றம், வேண்டுதல், பரிகாரம், சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்கங்கள், வழக்கங்கள், சகுனம், சோதிடம், ஜாதகம், ராசிப்பலன் - இப்படி எண்ணற்ற நம்பிக்கைகள் மக்களுக்கு.  இந்த நம்பிக்கைகளால் அவர்கள் ஆளப்படுகிறார்கள்.  இந்த நம்பிக்கைகளின் வேர்கள் சமயத்திடம் இருக்கிறது. சமயம் இறைவனைச் சார்ந்து இருக்கிறது.  புறச்சக்திகளின் ஆணையை மீறத் தயாராக இருக்கும் மக்கள்கூட அகச்சக்திகளின் ஆணையை மீறத்தயாராக இல்லை.


                         மேலே பார்த்தவைதான் இன்றைய சமூகத்தின் எதார்த்தம்.  இந்தச்சூழ்நிலையில் சமூக மாற்றத்திற்கான எந்த இயக்கமும் சமயத்தின் செல்வாக்கைப் புறம்தள்ள முடியாது.  வெறும் முரட்டுத்தனமான தாக்குதல்களால் மக்களை மாற்றிவிட முடியாது.  மக்கள் மத்தியில் சிந்தனை மாற்றம் ஏற்பட வேண்டும்.  சித்தாந்த விவாதமும், போராட்டமும் நடத்தப்பட வேண்டும்.  மக்களைச் சிந்திக்க வைப்பதன் மூலம், சில தெளிவுகளை ஏற்படுத்த முடியும்.


                           புராணக் கதைகளுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும் ஆட்பட்ட மக்களை, சமயநிலைப்பாட்டை சமூக வரலாற்று பொருளாதார அறிவியல் பின்னணியில் புரிந்து கொள்வதற்கு நாம் உதவவேண்டும்.  சமயச் சக்திகளுக்குள்ளும் மோதல்கள், முரண்பாடுகள் உண்டு.  மூடப் பழக்க வழக்கங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் எதிரான கலகக்குரல் சமய உலகிலும் உண்டு.  சமய உலகில் தோன்றிய பல ஞானிகள் சடங்குகளை எல்லாம் நிராகரித்திருக்கிறார்கள்.  சீர்திருத்தம் பேசியிருக்கிறார்கள்.  வடலூர் சக்தியஞான சபைக்கும் காஞ்சி மடத்திற்கும் வேறுபாடு இல்லையா?

                             இந்த வேறுபாட்டை மேலோட்டமாகப் பார்க்காமல், இவற்றின் வேர்களை மக்களுக்குக் காட்டவேண்டும்.  இந்த முயற்சி சிந்ததனை வளர்ச்சிக்கு உதவும், சித்தாந்த போராட்டத்திற்கு உதவும்.  மறு சிந்தனை, மறுவாசிப்பு, மறுபக்கம் மக்களுக்குப் பழக்கமாக வேண்டும்.  அவை எல்லாம் இருக்கின்றன என்பது தெரியப்படுத்தப்பட வேண்டும்.  மறுசிந்தனையும், மறுவாசிப்பும் மறுபக்கமும் மக்களிடம் ஏற்படும்போது, அவர்கள் மாற்றத்தை நோக்கி நகர்வார்கள்.  பக்திமான்களிலும் பாரதி, விவேகானந்தர், வள்ளலார் போன்ற நெறியினர் உண்டு.  அவர்கள் எண்ணிக்கை அதிகமாக வேண்டும்.  அதற்கு ஒரு தத்துவ விவாதமும்,கருத்துப் பறிமாற்றமும் தேவை.  அதற்கு நான் எழுதிய முருகன் வணக்கத்தின் மறுபக்கம் உதவும்.


                                தமிழில் அர்ச்சனை, சாதிபாகுபாடு இன்றி அனைத்துமாந்தரும் அர்ச்சகராதல் போன்ற கோரிக்கைகளை கொள்கை அளவில் ஏற்கும் பலர் அதை நடைமுறைப்படுத்திக் கொள்ள தயங்குகிறார்கள்.  அந்தத் தயக்கம் உடைபட வேண்டும்.  அந்தத் தயக்கத்தை உடைக்க பக்தர்கள் மத்யிலேயே பலர் இருக்கிறார்கள்.  அவர்களை உற்சாகப்படுத்துவதும், உறுதுணையாக இருப்பதும், தார்மீகக் கரம் நீட்டுவதும் காலம் இடும் கட்டளையாகும்.  அந்தக் கட்டளையின் திசைவழிச் செல்ல இந்த நூல் உதவும்.

                                   திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக் கழகத்தின் முன்னாள் நூலகர் திரு.ஆறுமுகம் இந்நூல் எழுத பயன்பட்ட பல நூல்களையும் தகவல்களையும் திரட்டிக் கொடுத்தார்.  அவர் என் நன்றிக்கு உரியவர்.  என்னுடைய பல நூல்களைத் தொடர்ந்து வெளியிடும் சந்தியா பதிப்பகத்திற்கும், பதிப்பகம் சார்ந்த அன்பர்களுக்கும் என்றும் உண்டு என் நன்றி.

                       

Wednesday, 14 November 2012

பல்லாண்டு காலமாக திறனாய்வுகள் மற்றும் ஆய்வுகள் செய்துவந்த நான் முதன் முதலாக ஒரு நாவல் எழுதியிருக்கிறேன். வரும் டிசம்பர் மாதம் நாவல் வெளியாகிறது. நீதிமன்ற வழக்குகளின் அடிப்படையில் இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. நாவலின் பெயர் ‘மங்களம்’.

நீதிமன்ற வழக்கையே முழுமையாக வைத்து எழுதப்படும் முதல் தமிழ் நாவல் இது.